திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
1. கோயில் - பாதாதி கேசம்
பண் - பஞ்சமம்
215
மையல் மாதொரு கூறன் மால்
    விடையேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக்
    கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
    நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை
    உள்ளிடம் கொண்டனவே.
1
216
சலம்பொற் றாமரை தாழ்ந்தெழுந்த
    தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணியார்
    தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து)
    ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை
    உள்ளிடங் கொண்டனவே.
2
217
குருண்ட வார்குழல் கோதை மார்குயில்
    போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள்
    திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ
    ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
    யுள்ளிடங் கொண்டனவே.
3
218
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
    மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ்
    தடமில்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து
    வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே
    தமியேனைத் தளிர்வித்ததே.
4
219
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம்
    நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும் அணியார்
    தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும்
    திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்கழி என்உள்ளத்(து)
    உள்ளிடங் கொண்டனவே.
5
220
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து)
    ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார் மகிழ்ந்
    தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
    காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து)
    உள்ளிடங் கொண்டனவே.
6
221
படங்கொள் பாம்பனை யானொடு
    பிரமன் பரம்பரா! அருளென்று
தடங்கையால் தொழவும்
    தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும்
    தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே
    வினையேனை மெலிவித்தவே.
7
222
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு
    தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்
    தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும்
    திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே
    அடியேனை ஆட்கொண் டனவே.
8
223
செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி
    ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த்
    தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு
    மலரும் திருமுக மும்முகத்தினும்
நெற்றி நாட்டம் அன்றே
    நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.
9
224
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக்
    கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடை
    பாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
    அவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே
    பிரியா(து) என்னுள் நின்றனவே.
10
225
தூவி நீரொடு பூஅவை தொழு(து)
    ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்
    தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக்
    கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள்
    விடையான்அடி மேவுவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
2. கோயில்
பண் - நட்டராகம்
226
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
    அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
    துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை
    யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
    என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.
1
227
ஒக்க ஒட்டந்த அந்தியும்
    மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப்
    பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு
    தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன்
    மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே.
2
228
அலந்து போயினேன் அம்பலக்
    கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று)
    அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக்
    காலனை உயிர்செ வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை
    மேலொற்ற வந்தருள் செய்யாயே.
3
229
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக்
    கூத்தனே! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை
    பொன்பயப் பிப்பது வழக்கமோ?
திரளும் நீள்மணிக் கங்கையைத்
    திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல்
    அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
4
230
வைத்த பாதங்கள் மாலவன்
    காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழந்(து) இன்னமும்
    துதிக்கின்றார் எழில்மறை அவற்றாவே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
    தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட
    என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.
5
231
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம்வளைத்து
    அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை
    வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர்
    தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாலர்ப் பாதங்கள்
    காண்பதோர் மனத்தினை உடையேற்கே.
6
232
உடையும் பாய்புலித் தோலும்நல்
    அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வது மேவிடங்
    கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும்
    வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று
    ஆரையும் உள்ளுவது அறியேனே.
7
233
அறிவும் மிக்கநல் நாணமும்
    நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு
    தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன்
    என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர்
    ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.
8
234
வான நாடுடை மைந்தனே!
    ஓஎன்பன் 'வந்தரு ளாய்' என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய
    படர்சடைப் பால்வண்ணனே என்பன்
தேனமர் பொழில் சூழ்தரு
    தில்லையுள் திருநடம் புரிகின்ற
என் வாமணிப் பூணணி
    மார்பனே! எனக்கருள் புரியாயே.
9
235
புரியும் பொன்மதில் சூழ்தரு
    தில்லையுள் பூகரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக்
    காதலித்(து) இனையவர் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர்
    மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர்
    பரமன(து) அடியினை பணிவாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
3. கோயில்
பண் - இந்தளம்
236
அல்லாய்ப் பகலாய் அருவாய்
    உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை
    மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள்
    பரவ வெளிப் பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு)
    அருளித் தேவன் ஆடுமே.
1
237
அன்ன நடையார் அமுத
    மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
    கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
    தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
    காண விகிர்தன் ஆடுமே.
2
238
இளமென் முலையார் எழில்மைந்
    தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார்
    தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிரமலை
    போல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர்
    போற்ற அழகன் ஆடுமே.
3
239
சந்தும் அகிலும் தழைப்
    பீலிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின்
    கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப்
    பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட
    நட்டம் நாதன் ஆடுமே.
4
240
ஓமப் புகையும் அகிலின்
    புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்
    மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த
    பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள்
    சூடித் தேவன் ஆடுமே.
5
241
குரவம் கோங்கம் குளிர்புன்னை
    கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
    மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்ட
    பத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
    ஏந்தி அழகன் ஆடுமே.
6
242
சித்தர் தேவர் இயக்கர்
    முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம்
    பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த
    தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ
    நட்டம் குழகன் ஆடுமே.
7
243
அதித்த அரக்கன் நெரிய
    விரலால் அடர்த்தாய் அரளென்று
துதித்து மறையோர் வணங்கும்
    தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக்
    கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள
    மேனிப் பரமன் ஆடுமே.
8
244
மாலோ(டு) அயனும் அமரர்
    பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா! அரனே!
    அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை
    மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள்
    தாழப் பரமன் ஆடுமே.
9
245
நெடிய சமணும் அறைசாக்
    கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத்
    தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆருர்
    நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய
    கோலக் குழகன் ஆடுமே.
10
246
வானோர் பணிய மண்ணோர்
    ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை
    மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத
    வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானோர் பாடல் பத்தும்
    பாடப் பாவ நாசமே.
11
திருச்சிற்றம்பலம்

திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
4. கோயில்
பண் - பஞ்சமம்
247
கோல மலர்நெடுங்கண்
    கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப்
    பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ்
    தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை
    என்றுகொல் காண்பதுவே.
1
248
காண்பதி யான் என்றுகோல்
    திர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று)
    அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ்
    தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய்
    மறையோர் மலர்ப் பாதங்களே.
2
249
கள்ளவிழ் தாமரைமேல்
    கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே
    உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ்
    தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற
    ஒருவனை உணர்வரிதே.
3
250
அரிவையோர் கூறுகந்தான்
    அழகன் எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம்
    உகந்தான் உம் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய்
    புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற
    எம்பிரான்என் இறையவனே.
4
251
இறையவனை என்கதியை
    என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும்
    மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும்
    தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை
    நினைத்தேன் இனிப் போக்குவனே.
5
252
நினைத்தேன் இனிப்போக்குவனோ?
    நிமலத் திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த
    மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக்
    கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும்
    தில்லைமாநகர்க் கூத்தனையே.
6
253
கூத்தனை வானவர்தம்
    கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவருவின்
    முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும்
    அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற
    எம்பிரானடி சேர்வன்கொலோ?
7
254
சேர்வன்கொலோ அன்னையீர்
    திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி
    அணிநீ(று) என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும்
    தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன்
    எம்பிரான் என்பால் நேசனையே.
8
255
நேசமு டையவர்கள்
    நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த
காய்சின மால்லிடையூர்
    கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர்
    தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும்
    எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.
9
256
இறைவனை ஏத்துகின்ற
    இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள்
    மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின்
    அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை
    மகிழ்ந்தேத்துக வானெளிதே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com